Sunday, March 15, 2009

கவிதை எழுத துவங்கிய நாளில்.....

உடைந்து கிடக்கிறது வானம்
உன் வீட்டு ஒற்றை
முற்றத்தை பார்த்து

கதவடைத்து காத்து
கிடக்கிறது காற்று
பரவி கிடக்கும் உன் வாசம்
பரந்து விடாமல் இருக்க

மற்றோர் மிதித்திட கூடாது
என்று எண்ணி
மிரண்டு கிடக்கிறது - உன்
பாதம் பட்ட இரு நிலம்

தனக்குள்ளே கண்ணீர் சொரிந்து
தன்னை இரட்டிப்பாக்கி
வழிந்து நிற்கிறது
உனக்கான கடைசி தண்ணீர்

தன்னுள் வந்து அடைய
போகிறாய் என்று அறிந்து
தன்னை அணைக்க போராடி
தோற்று நிற்கிறது நெருப்பு

அசைவுகளற்ற உன்னை
காரணம் ஏதும் சொல்லாமல்
பின் தொடர்கிறது
என் முதல் கவிதை..........