Wednesday, November 30, 2011

ஜீமெயில் உபயோகிப்பது இன்னும் எளிது -1

அட போப்பா... 'நாங்க பத்து வருசமா ஜீமெயிலை உபயோகிக்கிறோம்.... எங்களுக்கு தெரியாததா!?' என சொல்பவர்கள் பின் வாங்கி கொள்ளலாம்.

இந்த பதிவு ஜீமெயில் பற்றி ஆதியில் இருந்து கற்று தருவது அல்ல. ஜிமெயிலை இன்னும் எப்படி எளிதாக கையாளலாம் என்று சொல்வதற்கே இப்பதிவு.பல பொருத்தமான வினவலை(query) உபயோகிப்பதன் மூலம் ஜீமெயிலை முழுமையாக இன்னும் சிறப்பாக பயன்படுத்த முடியும்.

சரி பதிவுக்கு செல்வோமா....


1) இன்பாக்ஸ் அன் ரீட்(Unread) பிரச்சனை

பலர் எதிர்கொள்ளும் பிரச்சனை தான். சிலநேரம் நம்முடைய இன்பாக்ஸ் லேபிளை பார்க்கும் போது பல மடல்கள் வாசிக்கப்படாமல்(Unread) இருப்பது தெரியும். ஆனால் நமது மின்னஞ்சல் முகப்பில் தேடினாலும் பல மடல்களை காண முடியாது.



சரி இன்பாக்ஸ் லேபிளில் தெரியும் மடல்களை எளிதாக வசிப்பதற்கு வழிமுறை தான் என்ன?



மேலே காணப்படும் புகைப்படத்தில் கொடுத்துள்ளதை போன்று ஜிமெயில் முகப்பில் 'is:unread' என்ற வினவலை(Query) கொடுத்தால் வாசிக்கப்படாத மடல்கள் எல்லாம் முகப்பில் தெரியும்.

2. இணைப்பின்(Attachments) படி மடல்களை தேடுவது.

உங்கள் நண்பர்கள் யாராவது உங்களுக்கு புகைப்படங்களையோ, எம்பி 3 பாடல்களையோ மின் அஞ்சல் மூலம் அனுப்பி இருக்கலாம். அவை உங்களுக்கு தேவைப்படும்போது அவற்றை எப்படி விரைவாக தேடி எடுப்பது?

ஜிமெயில் முகப்பில் 'has:attachment' என்ற வினவலை(Query) கொடுத்தால் உங்களுக்கு வந்திருக்கின்ற இணைப்புகள் மட்டும் முகப்பில் தெரியும்.




சரி.. ஒரு நண்பரிடம் இருந்து வந்த இணைப்புகளை மட்டுமே தேடுவது எப்படி?

ஜிமெயில் முகப்பில் 'has:attachment;from:"email address"' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் உங்கள் நண்பர் உங்களுக்கு அனுப்பிய இணைப்பை மட்டும் தேடலாம்.



நீங்கள் அனுப்பிய இணைப்பை எப்படி தேடுவது?

ஜிமெயில் முகப்பில் 'has:attachment;from:"emailaddress";to:"emailaddress="' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பிய இணைப்பை மட்டும் தேடலாம்.



3.கோப்புகளின்(file) படி மடல்களை தேடுவது

பொதுவாக பல்வேறு குழுமங்களில் நீங்கள் இருக்கும் போது உங்கள் ஜி மெயில் கணக்கானது மடல்களால் வெகு சீக்கிரம் நிரம்பி விட வாய்ப்புகள் இருக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இடத்தை அதிகமாய் பிடித்துக் கொள்ளும் கோப்புகளை நீங்கள் எளிதாய் தேடி அழித்துக் கொள்ளலாம்.

MP3 கோப்புகள் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் அதிக இடத்தை பிடித்துக்கொள்ளலாம். எனவே அதை எப்படி தேடுவது?
'filename:mp3' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் இருக்கிற MP3 பாடல்களை மட்டும் தேடிக்கொள்ளலாம்.



இப்படியாக எந்த கோப்பின் எக்ஸ்டன்சனையும்(Extension) சரியாக கொடுப்பதின் மூலம் அந்தந்த கோப்புகளை நீங்கள் எளிதில் தேடிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு

'filename:doc'
'filename:wmv'
'filename:pdf'
'filename:mov'

ஒரு குழுமத்திற்கு அனுப்பப்பட்ட பி.டி.எப் கோப்புகளை நீங்கள் ஏதாவது ஒரு லேபிளில் போட்டு வைத்திருக்கலாம். அவற்றை மட்டும் தேடுவது எப்படி?

'filename:pdf -label:"labelname"' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் அந்த குறிப்பிட்ட லேபிளில் இருக்கும் பி.டி.எப். மடல்களை மட்டும் தேடிக் கொள்ளலாம்.



- தொடரும்

தொடர்புடைய பதிவு..

Monday, October 31, 2011

அண்டி கிறிஸ்து

அண்டி கிறிஸ்து எப்படியாவது பிறந்து விடுவான் சீக்கிரம் உலகை அழித்து விடுவான் என கிளிப்பிள்ளை போல் சொல்லி கொண்டும், நம்பிகொண்டிருந்த நிக்கர் போட்ட காலகட்டம். அண்டி கிறிஸ்த்து அழகாக இருப்பான், அவனுடைய தலையில் 666 என எழுதப்பட்டு இருக்கும் என்ற சித்திரம் எங்களுக்குள் உருவாக்கப்பட்டு இருந்தது.

சில நேரங்களில் வெளிநாட்டுகளில் அண்டி கிறிஸ்து பிறந்தே விட்டான் என ஊரில் வயதான கிழவிகள் பேசி கொண்டு இருப்பார்கள். எனக்கு வரும் சந்தேகங்களை தீர்த்து வைப்பது மலர் அக்கா தான். இது போன்ற கதைகள் உண்மையா என கேட்டால் போதும் கையும், காதும் வைத்து சொல்லி விடுவாள். அவன் பிறக்காமல் இருக்க தினமும் ஜெபம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லுவாள். என்னை போன்ற நிக்கர் சிறுவர்களில் ஒவ்வருவர் மனதிலும் ஒரு அசைக்க முடியாத வாதையாக அவன் அந்நாட்களில் உருவெடுத்து நின்றான். ஒவ்வருவர் மனதிலும் ஒவ்வரு சித்திரம் வரைந்து வைத்திருந்தோம். பாதிரியார் கோயில்களில் அவனை பற்றி சொல்லாத போதும் எங்கள் ஜெபங்களில் அவன் பிறக்ககூடாது என்று சொல்லி கொண்டோம்..

Anti Christ என்பதை தான் அண்டி கிறிஸ்த்து என சொல்கிறார்கள் என புரிந்து கொள்ள ஆரம்பித்த பயம் போன வயதுகளில் கோயில் செல்லாத ஒரு இளவட்டம் ஊரில் உருவாகி இருந்தது. ஞாயிற்று கிழமை என்றாலே எங்கள் வாசம் ஊர் எல்லையில் இருக்கும் குளக்கரை தான். ஏறக்குறைய அண்டி கிறிஸ்த்து பற்றிய கற்பிதங்கள் அப்போது மனதில் இருந்து மறைந்து இருந்தது.

மலர் அக்காவுக்கு அப்போது திருமணமாகி, மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. குளத்தின் பெண்கள் சப்பாத்தில் (பெண்கள் குளிக்கும் பகுதி) குளித்து விட்டு தன் குழந்தையோடு வந்து கொண்டிருந்தாள். ஊருக்குள் செல்வது என்றால் ஆண்கள் பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். பூசை துவங்குவதற்கு அடையாளமாக சேரிக்கடை வேத கோயிலின் மணி ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது. வலது கையில் குழந்தையை இழுத்தவாறு மணி ஓசை வந்த திசையை பார்த்தவாறே பக்தியாய் முணு முணுத்தவாறு எங்களை கடந்தாள்.

சுனில் மெல்ல தலையை திருப்பி "அக்கோ.. ஓடி போ, மணி அடிச்சாச்சி.... சாமியாரு ஆசிர்வாதம் கொடுத்துட்டாருன்னா அப்புறம் கிடைக்கவே செய்யாது"

சட்டென எங்களை ஊடுருவி ஒருமுறை முறைத்து "போங்கல அண்டி கிறிஸ்துக்களா' என்று சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்தாள்.
ஏறக்குறைய எங்கள் மனதில் இருந்து அழிந்தே போன அண்டிகிறிஸ்து எங்கள் முன் இருப்பதாக நினைத்தோம்; நாங்களே அண்டிகிறிஸ்து ஆனதை எண்ணி உரக்க சத்தம் போட்டு சிரித்தோம்.. தலையை தடவிக்கொண்டோம் துரதிசடவசமாய் யார் தலையிலும் 666 இல்லை.

Friday, September 30, 2011

ரப்பர் - நூல் விமர்சனம்

இந்த நாவலில் சுய சாதிய ஆதிக்கத்தை நிறுவுவதில் பெரிதும் முயன்று, ஒரு தனிப்பட்ட மனிதரின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சமூகத்தின் வளர்ச்சியாகவும், வீழ்ச்சியாகவும் கட்டமைக்க முயல்கிறார் ஜெமோ.

நாவலுக்குள் செல்வதற்கு முன் ஆசிரியர் முன்னுரையின் ஒரு சில வரிகளை பார்ப்போம்.

"அந்தரங்க சுத்தியுடன் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளின் அளவுக்குத் தூய்மையுடன், சத்தியத்தின் ஒளியுடன் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்".
துரதிஷ்டம் என்னவென்றால் தன்னுடைய முதல் நாவலிலேயே வார்த்தையின் தூய்மையையோ, சத்யத்தின் ஒளியையோ நிறுவ முடியாமல் தோற்றுப் போகிறார் ஆசிரியர். நாவல் முழுக்க ஒரு மதத்தையும், சமூகத்தையும் நோக்கி சாடல்களை வைத்து தன்னுடைய வரலாற்று வன்மத்தை தீர்த்துக் கொள்கிறார்.


சரி நாவலுக்குள் செல்வோம்...

கேரள மாநிலத்தை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர கிராமம் ஒன்றில் கதை நடப்பதாக இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.

தாழ்ந்த சமூகத்தில் பிறந்த பொன்னுமணி என்ற விவசாயி, உயர்குடி மக்களான நாயர்களுக்குப் பணிவிடை செய்து, வேண்டியதைப் பெற்று அவர்களுடைய சொத்தை அபகரித்து, காடாக இருந்த பகுதிகளை மாற்றி ரப்பர் மரங்களை நட்டு, பெரும் பணக்காரர் ஆகி 'பெருவட்டர்' என்ற சமூக அந்தஸ்தைப் பெறுகிறார். அவருடைய மகன் செல்லையா- வும் ’பெருவட்டர்’ என்று அழைக்கப்படுகிறார்.செல்லையாவின் மனைவி திரேஸ் 'பெருவட்டத்தி' ஆகிறாள். அவள் ஆடம்பரத்தை விரும்புகிறாள்.

செல்லையா - திரேஸ் தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த மூன்று பெண்பிள்ளைகளும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் செட்டில் ஆகிவிடுகின்றனர். பின் உள்ள இரண்டு மகன்களில் பிரான்சிஸ் குடிகாரன், வேசிகளை நாடிப் போய் ஊதாரியாகச் சுற்றுபவன். லிவி என்ற இளைய மகன் பொறியியல் படித்துக் கொண்டிருந்தாலும், கீழ்த்தரமான நடத்தை உள்ளவன்.

செல்லையாவினுடைய மோசமான தொழில் அணுகுமுறைகளால் தொழிலில் நஷ்டம் வந்து பெரிய பெருவட்டர் உயிரோடு இருக்கும் போதே அவருடைய சொத்துக்களை விற்க வேண்டிய நிலை வருகிறது. தன் சந்ததியினருடையவீழ்ச்சியை பார்த்து, ஏக்கத்தோடு பெரிய பெருவட்டரும் இறந்து போவதாக நாவல் முடிகிறது.

வெளிப்படையாக இந்நாவலில் 'ரப்பர்' மரங்களினால் காடுகள் அழிந்து விட்டன என்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்க முயன்றாலும், முழுக்க முழுக்க தன்னுடைய சாதி மேட்டிமைத் தனத்தையும், கிறிஸ்தவர்கள் மேல் உள்ள வன்மத்தையும் மட்டுமே நிறுவி உள்ளார் ஜெமோ.

வட்டார வழக்கியலை முன்னிறுத்தி நாவலை எழுதும் போது முழுக்க, முழுக்க அதன் சிதைவு கெடாமல் எழுதப்பட வேண்டும். ஜெமோவின் இந்நாவலில் ஒரே கதாபாத்திரம் பாதி நேரம் வட்டார மொழியையும், பாதி நேரம் தமிழ் சினிமா மொழியும் பேசுகிறது.... புரிந்து கொள்வதற்கு கடினமான வட்டார சொற்களுக்கான விளக்கங்கள் 31-ம் பக்கம் வரைக்கே தரப்பட்டுள்ளது. அதன் பிறகு வாசிப்பவர்கள் எதுவும் புரிந்து கொள்ள வேண்டாம் என்று ஆசிரியர் நினைத்து விட்டாரோ என்னவோ :)

அடுத்து.... ஒரு பாஸ்டருக்கும், பாதிரியாருக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் கூட தெரியாமல் ஒரு நாவலை எழுதி, தைரியமாக வெளியிட்டு, பரிசும் பெற்றிருக்கிறார் (?!). என்னக் கொடுமை ஜெமோ இது!. கிறிஸ்தவ மதத்தை நோக்கிச் சாட வேண்டும்.. ஆனால்.... எப்படி ? எதை? என்பதில் எக்கச்சக்கத் தடுமாற்றம். அதனால் தான் பாஸ்டர்- பாதிரி விசயத்தில் கூட திணறுகிறார் மனிதர்!.

கதையின் ஓட்டத்தை வைத்து இவர் பாதிரியார் என்றே நாம் அனுமானிப்போம். சரி, எதற்காக இங்கே பாதிரியார்?. பெரிய பெருவட்டருக்கு 'அவஸ்த்தை கொடுப்பதற்காக (நோயில் பூசுதல்)' வருகிறார் என கதையில் சொல்ல வந்தாலும் , அவர் முன்னிறுத்த முயல்வது பாதிரியார் ஒரு பேராசைக்காரர், அடம்பர ஆபரணங்களை அணிபவர், கோபக்காரர். கடைசியில் அந்தக் கதாபாத்திரத்தை வைத்தே 'கிறிஸ்து நொட்டினாறு' என சொல்ல வைத்து சந்தோசப்பட்டு கொள்கிறார் ஜெமோ. ஐயா ஆராய்ச்சியாளரே ! சாதாரண வழக்காடலில் 'கிறிஸ்து' என்றழைப்பதை விட 'இயேசு/ஆண்டவர்' என்றே அழைப்பார்கள் நாஞ்சில் நாட்டு வேதக்காரர்கள். பின் நோயில்பூசுதல் கொடுப்பதற்கு பாதிரியார் தனியாக வருவது இல்லை, கூடவே உபதேசியாரும் வருவார். அதுசரி, பாதிரிக்கும், பாஸ்டருக்குமே வித்தியாசம் தெரியவில்லை... பின் எங்கிருந்து உபதேசியாரை கொண்டு சொருகுவது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஜெமோ எப்படிச் சித்தரிக்கிறார் என பார்ப்போம்.....

பொன்னுமணி - அனாதையாக அந்த ஊருக்கு வந்து கூலி விவசாய வேலைகள் செய்து, சொத்துக்களைச் சேர்த்து பெருவட்டர் என்ற நிலைக்கு வருகிறார். பின், அங்கு ஆதிக்க சக்திகளாக இருக்கும் நாயர்களிடம் பணிந்து போய், விவசாயம் செய்ய லாயக்கற்றுக் கிடக்கும் அவர்களுடைய காடுகளைப் பாட்டத்திற்கு எடுத்து ரப்பர் பயிர் செய்து பெரும் பணக்காரர் ஆகிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் திருப்பி கேட்கும் போது தர மறுக்கிறார்.

இந்த நாவலில் 'தோட்டம்' குடும்பத்தில் உள்ளவர்களில் 'கடும் உழைப்பாளி' என நல்லபடியாக சித்தரிப்பது பொன்னுமணியை மட்டும் தான். ஆனாலும் அவர் ஆசிரியர் பார்வையில் தாழ்ந்த குலத்தை சார்ந்தவர் ஆயிற்றே அவருக்கு எப்படி புனித பிம்பத்தை தருவது ? அதனால் அவருடைய பால்ய கதை ஒன்றை மீட்டு எடுக்கிறார், அதாவது பசிக்காக ஒரு குழந்தையை மிதித்து கொலை செய்தவர் இவர் என்று.

பின், பாட்டம் வாங்கிய நிலத்தை தர மறுக்கிறார் என்பது. ஜெயமோகன் சித்தரிக்கும் காலகட்டம் மலையாளி ஆதிக்கத்துக்குள் தமிழர்கள் சிக்கி இருந்த காலகட்டம். அதிகார மட்டத்தில் இருந்துகொண்டும் பண பலமும் கொண்ட நாயர்கள் ஆதிக்கத்தில் இருந்த காலம். அக்கால கட்டத்தில் பாட்டம் வாங்கிய நிலத்தை ஒரு தாழ்த்தப்பட்ட விவசாயியால் எப்படி திருப்பித் தராமல் இருக்க முடியும் ? ஜெமோவுடைய நோக்கம் ஒன்றே - உங்கள் முன்னேற்றம், உங்கள் உழைப்பால் வந்தது அல்ல என்பதை நிறுவ வேண்டும்.

அடுத்தது - செல்லையா பெருவட்டர் (பொன்னுமணி பெருவட்டருடைய மகன்)

செல்லையா பெருவட்டர் ரப்பர் தொழில் ஏற்றுமதி செய்வதற்காக பெரும் பணத்தை முதலீடு செய்து அதில் நஷ்டப்பட்டு, தந்தையின் சொத்துக்களை விற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். தமிழகத்தில் இருந்து கொண்டு கேரளா அரசின் சட்டமன்ற உறுப்பினர்களை அவர் விலைக்கு வாங்க முயல்வதாக சித்தரிக்கபடுகிறது. அது எப்படி சாத்தியம் என்பது ஜெமோவுக்கே வெளிச்சம்.

அடுத்தது - திரேஸ் - ( செல்லையா பெருவட்டருடைய மனைவி )

திரேஸ் ஒரு ஆடம்பரப் பிரியை, கணவரை பொருட்டாக மதிக்காதவள், இரக்கமற்றவள் என இக்கதாபாத்திரம் முழுக்க ஒரு வில்லி பாணியிலே சித்தரிக்கப்பட்டு உள்ளது... ஆனால் அறுபது வயதுக்கு மேலும் அவளை காமம் தேடி அலைகிறவளாக சித்தரிப்பது தற்செயலானதா ? இல்லை ஜெமோவின் வன்மமா?

பிரான்சிஸ் & லிவி - ( செல்லையா பெருவட்டருடைய மகன்கள் )

இதில் பிரான்சிஸ் ஊதாரியாக பெண்கள் பின் சுற்றித் திரிந்து, கடைசியில் ராம், லாரன்ஸ் ஆகிய டாக்டர்களின் அறிவுரைகளால் மனம் திருந்துபவன் போலவும்... லிவி - கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாமல் வீட்டில் உள்ள வேலைக்கார பெண்ணை தனது காமத்திற்காகப் பயன்படுத்தி, தந்தைக்கு பண நட்டத்தை ஏற்படுத்தி, தாயினுடைய தவறான நடவடிக்கைகளுக்கு உதவுவது போலவும் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

ஜெமோ இந்த மகன்கள் கதாபாத்திரத்தின் வழியாக சொல்ல வருவது - நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, ஏமாற்றி சொத்து சம்பாதித்து வைத்தாலும், உங்கள் குல வாரிசுகள் அதை எப்படியும் அழித்து விடுவார்கள் என்பது. ம்ம்.....

தன்னுடைய மேட்டிமை தாங்கிய நாயர் குலத்தை பற்றி எப்படி சொல்கிறார்?.

ஐயோ...! கேட்கவா வேண்டும்!!!! முஸ்லிம் வீரர்களை நாயர்கள் துரத்திய பராக்கிரமம் ஆகட்டும், அறைக்கல் தரவாட்டின் மேட்டிமையை சொல்வதில் ஆகட்டும், நாயர் பெண்களின் அழகை சித்தரிப்பதில் ஆகட்டும் மனிதர் புகுந்து விளையாடுகிறார். நிற்க.... சுயசாதிய பெருமையை சொல்லி கொண்டு போனால் நாவலை முற்றிலும் நிராகரித்து விடுவார்களே அதற்காகவே மூன்று கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். 1.தங்கம், 2. சுகாசினி, 3. வேலாயுதன் நாயர்(குளம்கோரி)

தங்கம் - அப்பாவியான அறைக்கல் நாயர் குடும்பத்து பெண். வறுமையால் பெருவட்டர் வீட்டில் வேலை செய்யும் அவளை லிவி தனது காமத்தை தணிக்க பயன்படுத்தி கொள்கிறான்(கவனிக்க....... அவள் நல்லவள் லிவி தான் கெட்டவன்). கடைசியில் மர்மமான முறையில் மரணம் அடைகிறாள்.

சுகாசினி - இவளும் நாயர் தரவாட்டு பெண் தான். வறுமையான சூழலால் விபச்சாரம் செய்கிறாள் ( ஒரு காட்சியில் பிரான்சிசைப் பார்த்து சொல்கிறாள்: "இதுவெல்லாம் விபச்சாரம் செய்து சம்பாதித்த சொத்து. உன் தாத்தா மாதிரி சாதுக்களைக் கொன்று கூட்டி வைத்த சொத்து இல்லை".). அப்போ சரி நாயர் பெண் விபச்சாரம் செய்தால் தப்பே இல்லை.:)

வேலாயுதன் நாயர்(குளம்கோரி) - இவன் தங்கத்துடைய அண்ணன்.

நாயர்களில் இவன் ஒருவனை மட்டும் தான் அகோரி போல சித்தரித்து இருக்கிறார் ஜெமோ..... ஆனால் கடைசியில் அவனும் தன் தங்கை மரணத்துக்கு காரணமானவர்களிடம் இருந்து பெரும் பணத்தை கறந்து தன் தாயை வாழ வைக்கிறான் என்பது போல முடிகிறது.

லாரன்ஸ் என்ற ஆதிவாசி கதாபாத்திரம் ஒன்றையும் உருவாக்கி உள்ளார் ஜெமோ... எதற்கு?? தனக்கும் கிறிஸ்துவை பிடிக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டுமே.. இதோ அந்த கதாபாத்திரத்தின் வழியாக ஜெமோ தனக்கான கோட்பாடை அடித்து தள்ளுகிறார்.
" கிறிஸ்து தேவாலயங்களில் இல்லை, ஆஸ்பத்திரிகளில் இல்லை, கான்வெண்டுகளில் இல்லை, கூட்டு பிரார்த்தனைகளில் இல்லை, கவிதை சொட்டும் ஜெபத்தில் இருக்கிறார். கிறிஸ்து மலைகளில், காடுகளில், இயற்கையில் இருக்கிறார்".

சரி... இந்த நாவலில் அவர் சொல்ல வருவது என்ன ? மேலோட்டமாக அவர் முன் வைக்கும் கருத்தைப் பார்ப்போம்.

ரப்பர் மரங்களால் சுற்றுச் சூழலுக்குக் கேடு. பணத்திற்காக ஏழை விவசாயிகள் அவ்வாறு செய்கின்றனர் என்கிறார். உண்மை தான் வாழும் சுற்றுப்புறத்திற்கு உகந்தது அல்ல ரப்பர். அதை முதலில் தமிழர் பகுதிகளுக்கு அறிமுகபடுத்தியது யார் ? மேட்டிமை பொருந்திய மலையாளிகளே...... பிரிவினைக்கு பின் இங்கே வாழ்வதற்கு உகந்தது அல்ல என பெருவாரியான பகுதிகளை உதறி தள்ளி கேரளத்திற்கே தஞ்சம் புகுந்தவர்கள் அவர்கள். இன்றும் தமிழர் வாழும் பகுதிகளில் கணிசமான சொத்துகள் அவர்களிடமே உள்ளது.

ஒரு ரப்பர் நட்டு, வளர்த்து, அதன் பலனை அனுபவிக்க குறைந்தது ஏழு வருட காலம் ஆகும். எனவே வாழை நடுதல், மரவள்ளி கிழங்கு நடுவது, நெல் உற்பத்தி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்த சாமானிய விவசாயிகளால் ரப்பர் தோட்டம் அமைப்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே இருந்தது. நாவல் வரையறுக்கும் கால கட்டங்களை எடுத்துக் கொள்ளும் போது ஒரு குடும்பத்தில் குறையாமல் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இருந்தனர். அவர்கள் தங்களுக்கு கிடைத்த உபரி நேரத்தில் மலைகளையும், காடுகளையும் கொத்தி சீரமைத்து ரப்பர் மரங்களை நட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பணம் ஈட்டி கொண்டார்களே தவிர ஜெமோ சொல்வது போல் ஏமாற்றி அவர்கள் சொத்து சேர்க்கவில்லை.

ஒரு காட்சியில் தம்பிரானிடம் இருந்து பொன்னுமணி நிலத்தை பாட்டம் கேட்க வருகிறார். மிகவும் பணிந்து கூழைக்கும்பிடு போட்டு நிலபாட்டம் கேட்க வருவதாக அக்காட்சி சித்தரிக்கப்பட்டு உள்ளது. உயர்சாதி பிராமணர்களிடம் இருந்து 36 அடி தொலைவிலும், நாயர்களிடம் இருந்து 12 அடி தூரத்திலுமே தாழ்த்தப்பட்டவர்கள் நிற்க வேண்டும் என்ற கொடுமையான அடக்குமுறை அக்கால கட்டத்தில் இருந்ததை ஜெயமோகன் ஏன் சொல்லாமல் மறைக்கிறார்?

சரி.... இந்த நாவல் ஜெமோ வைக்கும் அடியாழமான செய்தி என்ன ? வரலாற்று ரீதியான வன்மம்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், தனது மார்பகத்தைக் கூட மறைத்துக் கொள்ள உரிமை இல்லாத ஒரு சாதி... கல்வியாலும், பொருளாதாரத்தினாலும் முன்னேறி வந்ததை எப்படி ஜெயமோகன் நாயரால் பொறுத்து கொள்ள முடியும்?.

"யாமானே.... யாமானே...." என துண்டை இடுப்பில் கட்டி, கைகூப்பி நின்ற சாணன் பயல்கள், சட்டை போட்டு இறுமாப்பாய் வலம் வருவதை எப்படி தரவாட்டுகார யாமான் ஜெயமோகனால் பொறுத்து கொள்ள முடியும் ?

'உன் மேல் உள்ள தலைவரி, கூரை வரி, மர வரி, தலைப்பாய் வரி, குடை வரி, ஆடை & அணிகலன் வரி எல்லாவற்றிலும் இருந்து விடுதலை வாங்கி தருகிறேன் என் மதத்தை தழுவு' என்று இன்னொரு வாழ்வுக்கு வழி காட்டிய சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தை கண்டாலே ஆண்டான் ஜெயமோகனுக்கு கடுப்பு தானே வரும்.

இந்த வன்மத்தை ஒரு கதாபாத்திரத்தின் மேல் ஏற்றி வைத்து மட்டம் தட்டுகிறார் ஜெமோ.. அந்த கதாபாத்திரம் எபன் - தெரேசுடைய 'டீன் ஏஜ்' காதலன்.

எபன் - திரேசுடைய காதலுக்காக ஏங்கித் தவிப்பவன் என்றும், அதே வேளையில் மலையாளிகளுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மனநிலை கொண்ட கல்லூரி வாலிபனாகவும், சொந்தமாக முடிவெடுக்க முடியாமல் திணறுபவன் போலவும் சித்தரித்திருக்கிறார். எபன், மலையாளி ஆதிக்கத்தை எதிர்த்து தெரேசோடு விவாதிக்கும் போது தனது சொந்த அரிப்பை திரேஸ் கதாபத்திரத்தின் வழியாக தணித்துக் கொள்கிறார் ஜெமோ...... உச்சபட்சமாக குமரி தந்தை மார்சல் நேசமணி ஐயாவை "நேசமணி நொட்டினாறு... " என்று சொல்லும் அளவிற்கு. கடைசியில் எபன் கதாபாத்திரம் மலையாளி போலீசால் சாவடிக்க படுகிறது. அதற்கு காரணமான ஆதிக்க பின்புலத்தை எங்கேயும் பதிவு செய்யவே இல்லை நாவலாசிரியர். புரட்சிக்காரன் என்றாலே வலதுசாரி ஜெமோவுக்கு விக்கல் வந்துவிடுமே.... அது தான் இங்கேயும் நடந்தது.


நாயர்களுடைய வீழ்ச்சி அவர்களாலே உருவானது. காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு, உழைக்காமல் சொகுசாய் வாழ்ந்து கொண்டிருந்த நேரம், மார்தாண்டவர்மா மகாராஜா நிலப்பிரபுத்துவ முறையை ஒழிக்கிறார். பின் திருவிதாங்கூர் திவான் மன்றோ அதிகார அமைப்புகளை மாற்றுகிறார். சும்மா இருந்து காலம் காலமாய் உண்டு கொண்டிருந்த நாயர்களுக்கு வாழ வழி தெரியாமல் தறவாடுகளுக்குள்ளே பிரச்சனை வந்து, குடும்பங்கள் சிதறி வீழ்ச்சியை சந்திக்கின்றனர். அந்த வீழ்ச்சியின் கோபத்தை அதே காலகட்டத்தில் எழுச்சி பெற்ற இன்னொரு சமூகத்தின் மேல் காட்டுவதில் யாருக்கு என்ன லாபம்?

1822 வருடம் துவங்கி 1859 வரை ஏறக்குறைய மூன்று காலகட்டங்களாக நடந்த தோள்சீலை கலகத்தில் தான் முதல் சமூக அந்தஸ்தே அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து 26-7-1859 அன்று அரசு வெளியிட்ட விளம்பரம்.

".. we hereby proclaim that there is no objection to shanar women either putting on a jacket, like the christian shanar women, or to shanar women of all creeds dressing in coarse cloth, and tying themselves round with it as the Mukkavattigal do, or to their covering their bosom in any manner whatsoever, but no like women of higher caste"

இத்தகைய சமூக விடுதலையால் கிடைத்த எழுச்சியை பாராட்டாவிட்டாலும் கொச்சைப் படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா ஜெயமோகன் அவர்களே....

இந்நாவலை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் போது, வரலாற்று ரீதியான பகைமையை தன் நாவலில் முன்னிறுத்த முயன்று ஒரு படைப்பாளியாய் தோற்றுப் போன ஜெயமோகன் மேல் பரிதாபம் தான் வருகிறது.

அண்ணல் அம்பேத்கருடைய வாக்கை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்........
"எவர்கள் இந்நாட்டின் சரித்திரத்தால் மறைக்கப்பட்டார்களோ அவர்களே இந்நாட்டின் சரித்திரத்தைத் திரும்ப எழுதுவார்கள்"


நன்றி: பண்புடன்

புகைப்படங்கள் உதவி: கூகிள், ஜெயமோகன்.இன்

Wednesday, August 31, 2011

கதைச் சொல்லிகள்......

ஆனி, ஆடி மாதம் என்றாலே எங்கள் ஊரில் மழை கொட்டோ, கொட்டென கொட்டும். கிணறு முதல் குளம் வரை நிரம்பிவழியும் அந்நாட்களில், விளையாடுவதற்கு போக்கற்று ஏதேனும் ஒரு வீட்டு திண்ணையில் முடங்கி கிடப்போம். பொழுதே போகாத அந்த பால்ய நாட்கள் முழுவதும் எங்களை கட்டிப்போட்டது எங்கள் ஊர் கதைச்சொல்லிகளே...








கதைகள் கேட்க பெரும்பாலும் நாங்கள் கூடுவது கோவில் பிள்ளை தாத்தாவின் வீட்டுத் திண்ணையிலோ , 'கிராப்' தாத்தாவின் வீட்டுத்திண்ணையிலோ தான். மணி சித்தப்பா, ஜெயக்குமார் அண்ணன், ஜாண் அண்ணன், சுந்தரம் அண்ணன், ஸ்டான்லி அண்ணன் என எங்கள் ஊரில் கதைச்சொல்லிகளுக்கு பஞ்சமே இல்லை..அவர்கள் கதை சொல்லி முடிக்கும் போது ஒரு புராணப் படத்தை பார்த்த திருப்தி உருவாகும். பின் அக்கதை, எங்கள் வழியாக பள்ளி நண்பர்களிடையே ஊடுருவும்...

பெரும்பாலும் இவர்களுடைய கதைகள் அச்சம் ஊட்டுபவையாக இருக்கும். இவர்கள் சாகச மனிதர்களை பற்றி சொல்லும் போது அந்த மனிதர்களை தேடி போய் விடலாமா என்று கூட யோசனை போகும். இரவு வழிமறிக்கும் யாக்கிகள், பழிவாங்க காத்திருக்கும் சர்ப்பங்கள்(பாம்புகள்) போன்ற கதாப்பாத்திரங்களுடைய கதைகளை ஏறக்குறைய எல்லா கதைச்சொல்லிகளுமே சொல்லி இருப்பார்கள் ஆனால் வெவ்வேறு சம்பவங்களுடன் கோர்த்து....

சென்னை என்ற கான்கிரீட் காட்டில் தற்போது வசிக்கும் சுந்தரம் அண்ணன் பெரும்பாலும் காட்டில் நடக்கும் கதைகளை சொல்வார்.
அதில் ஒன்று...
காட்டில் ஒருவகை பறவை உண்டு , அந்த பறவை அந்த காட்டிலேயே உயரமான மரத்தில் தான் வசிக்கும் . அபூர்வமாக முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் அப்பறவை முட்டை இடும்போது அதற்காக காட்டில் அபூர்வமாக கிடைக்கும் ஒரு வேரை வைத்து ஒரு கூடு தயாரிக்கும். அந்த வேரை எடுத்து, பறந்து செல்லும் போது எந்த மிருகத்தையோ, மனிதனையோ கடந்து போனால் அந்த உயிர்களின் முதுகெலும்பு முறிந்து போகும். அந்த மரத்தில் இருந்து அந்த வேரின் நிழல் நம் மேல் படாமல் எடுத்து வந்து இரும்பின் மேல் தடவினால் தங்கமாகுமாம். தான் ஒருமுறை பேச்சிப்பாறை காட்டுக்கு சென்ற போது அந்த பறவையை பார்த்திருப்பதாக சொல்வார்....

அடுத்த ரெண்டு நாட்கள் கேட்கவே வேண்டாம்.. அந்த பறவையையும், வேரையும் கண்டுபிடிக்க மாட்டோமா... நிறைய மிட்டாய் வாங்கி சாப்பிடலாமே என ஏக்கத்தோடு அலைவோம்.

திகில் அடிக்கும் கதைகளை சொல்வதில் முதலிடம் மணி சித்தப்பாவுக்கு தான்....


நடு இரவில் எங்கேனும் போய் குளம் வழியாக வீடு திரும்பும் போது யாக்கி வழி மறிக்கலாம். யாக்கி நடு இரவிலும் பூவும், பொட்டும் வைத்திருப்பாள். நம்மிடம் வெற்றிலை கேட்பாள். சுண்ணாம்பு கொடுக்கும் போது கத்தியில் எடுத்து தான் கொடுக்க வேண்டும். பின் நாம் நடக்க ஆரம்பிக்கும் போது நமது பெயரை சொல்லி கூப்பிடுவாள் அப்போது நாம் திரும்பி பார்க்காமல் நடக்க வேண்டும். கையில் கத்தியோ, வெட்டோத்தியோ வைத்திருந்தால் யாக்கி நம்மை மறிக்க மாட்டாள் என அறிவுரை சொல்லுவார்.

ஊரில் நமக்கு தெரியாத ஒரு பெயரை சொல்லி அந்த நபர் பேய் அடித்து தான் இறந்தார் எனவும்.... பேய் அடித்து முதுகில் ஐந்து விரல்களில் தடம் இருந்ததாகவும் சொல்லுவார். குளத்தங்கரையில் ஒரு சில நேரம் தீ பந்தத்தை கொளுத்தி கொண்டு பேய் போனதை தான் பார்த்திருப்பதாக சொல்வார்.

ஜாண் அண்ணனும் இதே மாதிரி கதை சொல்லுவார்.....



இரவு பன்னிரண்டு மணிக்கு பின் தான் பேய்கள் கல்லறையில் இருந்து எழுந்து உலாவும் என்றும் பேய்களை நமது வெறும் கண்ணால் பார்க்க முடியாது என்றும், வீட்டு வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடு, நாய் போன்றவற்றால் அவைகளை பார்க்க முடியும் என்றும், நாய்கள் ஓலமிடுவது பேய்கள் நடமாட்டத்தை பார்த்து தான் என்றும் சொல்வார்.
இக்கதைகளை கேட்ட சில நாட்கள் இரவு தூக்கமே வராது. நாய்கள் குரைத்தாலே பேய்கள் தான் நடமாடுகிறது என்று நான் உட்பட ஊரில் இருந்த அத்தனை வாண்டுகளும் நம்பினோம்.


சர்ப்பத்தின் கதைகளை ஏறக்குறைய எல்லோருமே சொல்வார்கள்....
ஜோடி பாம்புகளை அடிக்க கூடாது. ஒத்தையாய் பாம்பை அடித்து கொன்றால் அதன் ஜோடி காத்திருந்து பழி வாங்கும் என்றும். பாம்பை அடிக்கும் போது உடனே அடித்து கொன்று விட வேண்டும் அதை சாபமிட வைக்க கூடாது என்றும்... பாம்புக்கு கொஞ்சம் உயிர் விட்டு புதைத்தாலும் அது மண்ணின் வழியாக ஊடுருவி வந்து பழிவாங்கும் என்றும் சொல்வார்கள்.

பக்கத்து ஊரில் பாம்பின் தலையில் மண்வெட்டி வைத்து வெட்டியதில் தலை பறந்து நன்றாக வளர்ந்திருந்த ஒரு பனை மரத்தில் தட்டி விழுந்ததாகவும்.. ஒரு வாரத்திலேயே அந்த பனை மரம் பட்டு போனதாகவும் சொல்வார்கள்.

சர்ப்பங்கள், நாகரத்தின கற்களை கக்கும் கதைகள் சுவாரசியமானவை.....

நெடுநாள் விஷத்தை தேக்கி வைத்திருக்கும் நாகத்தின் வயிற்றில் நாகரத்தின கற்கள் உருவாகும். அதை அமாவாசை இரவன்று ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து விட்டு அந்த நாகரத்தினத்தின் வெளிச்சத்தில் இரை தேடும். நாம் அந்த நாகரத்தினத்தை எடுக்க முயற்சித்தால் அதன் வெளிச்சம் குறையும் போது பாம்பானது நம்மை கொத்தி விடும். நாகரத்தினத்தை நாம் நடு இரவில் பார்த்தால், மாட்டு சாணத்தால் அந்த நாகரத்தினத்தை மூடி விட்டு, பக்கத்தில் உள்ள உயரமான மரத்தில் ஏறி அமர்ந்து விட வேண்டும். நாகரத்தினத்தின் வெளிச்சம் குறைந்து அதை தேடி வரும் சர்ப்பத்தால் அதனை கண்டுபிடிக்க முடியாமல், தன்னை தானே தற்கொலை செய்து கொள்ளும். அடுத்தநாள் விடியற்காலையில் நாகரத்தினத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இன்னொரு கதை.......



மழை நேரத்தில் ஆற்றில் புரண்டு வரும் தங்க அண்டாக்கள் பற்றியது. இது போல வரும் அண்டாக்களை பிடிப்பது எப்படி என்றும் சொல்வார்கள்.. தவறாக பிடித்தால் அது கவிழ்ந்து நம்மை கொன்று விடும் என்றும் சொல்வார்கள். கண்டிப்பாக ஊரில் தங்க கருப்பட்டியோ, அண்டாவோ கிடைத்த ஒருவர் இவர்களது பார்வையில் இருப்பார்கள்.

இன்று நினைத்து பார்த்தாலும் என்னால் இதே அளவு லாவகத்துடன், நம்பும்படி அக்கதைகளை சொல்ல முடியுமா என்பது சந்தேகமே.. ஆனால், அந்நாட்களின் சுவாரசியமே கேள்விகள் ஏதும் எழுப்பாமலே அக்கதைகளை நாங்கள் ஏற்றுகொண்டது தான் என்று தோன்றுகிறது. அந்த பால்ய கதை நாட்களை நிரப்பிய அண்ணன்கள் பிழைப்புக்காக பல ஊர்களில் புலம் பெயர்ந்து விட்டனர். ஊருக்கு செல்லும் போது அபூர்வமாய் தென்படும் அவர்கள் என்னை கண்டு சிநேகத்தோடு சிரித்து "நல்லா இருக்கியா, குடும்பம் எல்லாம் நல்லா இருக்கா, வேலை நல்லா போகுதா" என்று ஒரு சில கேள்விகளுக்குளாகவே நலம் விசாரித்து,நகர்ந்து போய் விடுகிறார்கள்.

அவர்கள் கடந்து போகும் போதெல்லாம் என்னுள் எழும் விடையில்லா கேள்வி.....
"எங்கே தொலைத்திருப்பார்கள் அவர்களுக்குள் இருந்த கதைச் சொல்லிகளை??"

Sunday, July 31, 2011

சமணமும் தமிழும் - நூல் விமர்சனம்


தமிழ்மொழி தன் வழி நெடுக பிரமாண்டமான மனிதர்கள் நமக்கு தந்திருக்கிறது. அதில் சிலர் கடவுளாகவும், சிலர் அரசர்களாகவும், சிலர் அறிஞர்களாகவும், சிலர் புலவர்களாகவும் போற்றப்படுகின்றனர். அதில், நம்மொழி நமக்கு தந்த முக்கியமான அறிஞர்களில் ஒருவர் மயிலை.சீனி.வேங்கடசாமி.

மயிலை.சீனி.வேங்கடசாமி ஒரு தமிழறிஞர் மட்டுமல்ல மிகச்சிறந்த இலக்கிய ஆய்வாளரும் கூட. தவறான கருத்துக்களை மறுத்து உண்மையை நிலைநாட்டுவதும், அதிகம் அறியாத இருண்ட பகுதிகளுக்கு வெளிச்சமூட்டுவதுமே இவருடைய ஆய்வு நெறிகள். இவர் நமக்கு தந்த முக்கியமான நூல்களில் ஒன்று 'சமணமும் தமிழும்'.

சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டு போல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்கு செய்யாத காரணத்தினாலே தான் இந்நூலை தாம் எழுதியதாக குறிப்பிடுகிறார்.


சமண சமயம் தோன்றிய வரலாற்றிலிருந்து இந்நூல் துவங்கிறது. சமண சமயம் ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநோகாந்தவாத மதம், சித்தியவாத மதம் என பல பெயர்களில் விளங்கப்படுகிறது. சமண சமயக் கொள்கைகளை பரப்பும் பொருட்டு விருஷப தேவர்(ஆதி பகவன்) முதல் வர்த்தமான மகாவீரர் வரை மொத்தம் இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்கள் இப்பூமியில் தோன்றியுள்ளார்கள். ராமாயணம் மற்றும் பாரதம் இந்து மதத்தில் உள்ளது போல சில,சில மாறுதல்களுடன் சமண சமயத்திலும் காணப்படுகிறது என்பதையும் சமண சமயத்தின் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகிய மகாவீரர் காலத்தில் வாழ்ந்தவர் தான் பவுத்த மதத்தை உண்டாக்கிய மற்காலி என்றும் அதனால் பவுத்த, ஆசீவக மதத்திற்கும் முற்பட்ட மதம் சமண மதம் என ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

நவபதார்த்தம் எனப்படும் உயிர், உயிரல்லாது, புண்ணியம், பாவம், ஊற்று, செரிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு போன்ற சமண தத்துவத்தின் ஒன்பது பொருட்களை சமண சமய நூல்களான மணிமேகலை, சீவகசிந்தாமணி, நீலகேசி ஆகியவற்றின் துணை கொண்டு விளக்கியுள்ளார்.

சமணர்கள் ஒழுக்கத்தை சாவக தர்மம், யதி தர்மம் என இருவகையாக பிரிக்கின்றனர். அதில் சாவக(சிராவக) தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம் என்றும், யதிதர்மம் உலகத்தைத் துறந்து வீடு பேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம் என்றும் குறிப்பிடுகின்றார். சமண முனிவர்கள் துறந்து வாழ்ந்த சிற்றின்பத்தில் ஐம்பொறிகள் எவை என்பதை நாலடி நானூறு என்னும் சமண நூல் பாடல் மூலம் விளக்கியுள்ளார்.
'மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினை - கைவாய்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்'

சமண சமயத்தில் இல்லறம்-துறவறம் பற்றி கொள்கைகளுக்கு திருத்தக்க தேவர் அருளிய நரிவிருத்தத்தில் வரும் இப்பாடலை முன்வைக்கிறார்.
'பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே'

சமணர்கள் என்றாலே ஆடை துறந்து அம்மணமாக அலைப்பவர்கள் அல்ல என்றும், சமண சமயத்தில் உயர்நிலையடைந்த துறவிகள் மட்டுமே அது போன்று இருப்பார்கள், மற்றபடி இல்லற அறத்தை மேற்கொள்ளும் சமணர்கள் நம்மை போல் ஆடை உடுத்தி பத்து வகை ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்தனர் என்பதை திருக்கலம்பகம் என்னும் சமண நூல் வழியாக விளக்குகிறார்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பாத்திரபாகு முனிவரின் சீடராகிய விசாக முனிவரால் தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியதை மதுரையில் காணப்படுகின்ற பிராமி கல்வெட்டெழுத்துக்கள் சான்று பகர்கின்றன என்பதையும் பாண்டிய நாட்டிலிருந்தே இலங்கைக்கு சமண மதம் பரவியிருக்க வேண்டும் என்பதை 'மகா வம்சம்' நூல் மூலம் உறுதிப்படுத்துகிறார்.

மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்ககாலத்து நூல்களும் தேவாரம், நாலாயிர பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் ஆகிய பிற்காலத்து நூல்களும் சமண சமயம் தமிழ் நாட்டில் எவ்வாறு வேரூன்றி தழைத்து, தளிர்த்து இருந்தது என்பதை சான்று பகர்கின்றன. சமணர்கள் தமது மத கொள்கைகளை மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத பெருங்குற்றமாக கருதியதால் மக்கள் பேசிய தாய்மொழியிலேயே தமது சமண நூல்களை எழுதினர். அதனால் தான் சமண சமயம் தமிழ்நாட்டில் முதலில் ஆழமாக கால்பதித்தது என்கிறார் நூலாசிரியர். தமிழ்நாட்டில் சமணம் ஆழமாக பரவியிருந்ததை பிற சமய நூல்கள் கூட தெளிவுபடுத்தி இருக்கின்றன என்பதை சைவ நூலான பெரிய புராணத்தின் ஒன்றின் மூலம் விளக்குகிறார்.அப்பாடல்.

'மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்மிகுந்தே
ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால் பூதிசா தளவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண் டேதமில்சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்."
(பெரிய புராணம் திருஞான சம்பந்தர் - 18)

சமண மதம், வைதீக மதம், பவுத்த மதம், ஆருகதம் போன்றவை தமிழகத்தில் மிகபெரிய சமய போர்களை நடத்தியுள்ளன. பவுத்தமும், ஆருகதமும் தமிழகத்தில் குன்றி போக வைதீக மதம் திராவிட மதக்கடவுளான முருகன், கொற்றவை, சிவன் போன்றவைகளை உள்வாங்கியபின் சமணர்களுக்கும், இந்து மதத்திற்குமான சமய போர்கள் உக்கிரமடைந்தன என்பதை பல பாடல்கள் நமக்கு தெளிவுபடுத்துகின். திராவிட-வைதீக மதங்கள் இரண்டினையும் இணைத்து சேக்கிழார் முன்வைக்கும் பாடல்கள் சிலவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். அவை...

'வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறை விளங்க'
'தாரணி மேற் சைவமுடன் அருமறையின் துறை விளங்க'
'சைவ முதல் வைதீகமும் தழைத் தோங்க
'அருமறை சைவத் தழைப்ப'
'சைவ நெறி வைதீகத்தின் தருமா நெறியொடுந் தழைப்ப'

சைவ-வைணவ சமயங்கள் ஒன்றுபட்டிருந்த கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் சமயபோர் உச்சமடைந்து சமண மதம் வீழ்ச்சியை சந்தித்தது. அதற்கு முக்கியமான காரணமாக ஆசிரியர் கொள்வது சமண மதம் 'வீடு பேற்றை' துறவறம் எய்தினால் மட்டுமே அளித்து ஆனால் இந்து மதமோ ஒருவர் இறைவனிடம் பக்தி கொண்டாலே அவர் 'வீடு பேறு' அடையலாம் என்றது. இதனை தேவாரம், நாலாயிரம் முதலிய சைவ நூல்களில் காணலாம் என்கிறார்.

கழுவேற்றுதல் கலகம் செய்தல், நிலபுலன்களை கவர்தல் என பலவிதத்தில் சமண சமயம் தாக்கப்பட்டது. பல சைவ-வைணவ நூல்கள் இதை உறுதிபடுத்துகின்றன. உதாரணத்திற்க்கு தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருப்பாடல் மூலம் அக்காலத்துச் சமய போர் எவ்வளவு முதிர்ந்து, காழ்ப்பு கொண்டிருந்தது என்பதை காணலாம்.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே'

சமணம் தோய்ந்து போன போது அம்மதத்தின் பல கொள்கைகளையும், பண்டிகைகளையும் இந்துமதம் உள்வாங்கியது என எடுத்துக்காட்டுகளோடு விவரிக்கிறார். உதாரணத்திற்கு கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்தில் தங்கியிருந்து வீடுபேறு அடைந்ததை தீபாவலியாக சமணர்கள் கொண்டாடினர். பிற்காலத்தில் சமணர்கள் இந்துமதத்தில் சேர்ந்த போது அவ்விழாவை தொடர்ந்து கொண்டாடினர். இந்து பண்டிதர்களும் பின்னர் அவ் விழாவிற்கு ஒரு புராண கதையை கற்பித்துக் கொண்டு இன்று அப்பண்டிகையை 'தீபாவளி'யாக இந்து சமயத்தவரால் கொண்டாடப்படுகிறது.சமணம் தமிழகம் முழுவதும் பரவி இருந்திருக்கிறது. பக்தி இயக்கத்தின் துணையினால் உயிர் பெற்ற இந்துமதம், சமண சமயத்தின் கொள்கைகள், பண்டிகைகளை மட்டுமல்லாது அதன் கோயில்களையும் கவர்ந்து கொண்டது என்பதை தொல்லியல் துறையினாரின் ஆய்வுகளுடன் ஒப்பிட்டு நமக்கு தந்திருக்கிறார்.

சமணமும், தமிழும் என்ற இந் நூலை வாசித்து முடித்த பின் அது தந்த பிரமிப்பில் இருந்து வெளிவரவே சில நாட்கள் ஆகின. மேம்போக்கான செய்திகளை சொல்லாமல் பெரும்பாலும் கல்வெட்டுகள், சங்கப்பாடல்கள், சமய நூல்களின் துணை கொண்டே நமக்கு இந்நூலை தந்திருக்கிறார் ஆசிரியர்.

தமிழரின் தொன்மையையும், அவர்களின் ஆதிமதம் எது என்ற நமது பார்வையையும் இந்நூல் விசாலப்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.வரலாற்றை நேசிக்கிற,தமிழ் தேசியத்தை நம்புகிற அன்பர்கள் தவறவிட கூடாத நூல் இது. அரசுடமையாக்கப்பட்ட இந்நூலை பின்னிணைப்புகளுடன் முதல் பதிப்பாக செண்பகா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. விலை ரூ75.

இந்நூலை தபால் மூலம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
தபால் பெட்டி எண்: 8836
பாண்டி பஜார், சென்னை-17
தொலைப்பேசி : 044-24331510

Wednesday, June 29, 2011

கடவுள் சிரித்தார்

மெட்ராஸ் அப்போது சென்னை ஆகவில்லை. பட்டய படிப்பு முடித்து விட்டு மெட்ராசின் மூலை முடுக்கெல்லாம் வேலைக்காக சுற்றி திரிந்த காலம். அன்று சென்னை எக்மோர் பகுதியில் அலைந்து விட்டு, பட்டினப்பாக்கம் செல்லும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன்.

'சார்' என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தால் மாநிறத்தில் கந்தலான உடை, பரட்டை தலையென சுமார் பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அருகில் நின்றிருந்தான்.

'என்னப்பா'? என கேட்டேன்.

'என் பேரு சரவணன். சொந்த ஊரு திருச்சி . ஊர்ல நானும் அம்மாவும் இட்லி சுட்டு பொழச்சிக்கிட்டு இருந்தோம். மெட்ராஸ்ல பெரிய ஹோட்டலுல வேல வாங்கி தரேன்னு சொல்லி கூப்பிட்டாரு. இந்த அட்ரஸ்ல போய் பார்த்தா அவரு ஒரு வாரமா வேலைக்கே வரலன்னு சொன்னங்க. நானும் ரெண்டு நாளா வேற எங்கையாவது வேல கிடைக்குமான்னு தேடி பாத்தேன். கிடைக்கல.. ஊருக்கு போக காசில்ல, நீங்க தர முடியுமா ?'

அனுபவம் தந்த பாடங்களால் அவனையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தேன். அவன் கையில் வைத்திருந்த துண்டு சீட்டை வாங்கி பார்த்தேன். எக்மோரில் ஏதோ ஒரு உணவகத்தின் பெயரும், முகவரியும் எழுதப்பட்டு இருந்தது.என் மவுனத்தை புரிந்து கொண்ட அவன் 'சார் இந்த வாட்சை வச்சுக்கோங்க சார், டிக்கெட் மட்டும் எடுத்து குடுங்க பணம் வேண்டாம்'.டிக்கெட் விலைக்கு பெறுமானம் கூட வராத வாட்ச் ஆனாலும் அவன் டிக்கெட் மட்டும் எடுத்து கொடுங்கள் என்று சொன்னது அவன் மேல் இன்னும் நம்பிக்கையை ஊட்டியது.
'வாட்ச் எல்லாம் வேண்டாம் பா.. டிக்கெட் எவளவு ரூபாய் தெரியுமா' என்று கேட்டேன். 'தெரியாது சார்' என்றான் வாயை சுளித்து.
'வா கேட்கலாம்' என்று டிக்கெட் கவுண்டருக்கு போய் பயண சீட்டு கேட்ட போது என்னிடம் இருந்த பணத்தை காட்டிலும் அதிகமான தொகையாக இருந்தது.

'சார்' என பின்னால் இருந்து ஒரு குரல் அழைத்தது. திரும்பி பார்த்தால் கையில் இரண்டு கால்களும் ஊனமான ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். 'நீங்க திருச்சிக்கு டிக்கெட் கேட்டதை பார்த்தேன், ஊனமுற்றோர் சலுகையில என்கூட ஒருத்தர் ஒன் தேர்ட் டிக்கெட் எடுத்து கூட வரலாம், நீங்க விருப்பப்பட்டா என் கூட வரலாம்'

பின்னால் பயண சீட்டு எடுக்க வந்தவருக்கு வழியை விட்டு வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தேன். ' கடவுளே... ஒருவருக்கு மானசீகமாகவே உதவி செய்ய விரும்புகிறேன். என்னிடம் இந்த சிறுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு பணம் இல்லை. நீ உண்மையிலேயே இருக்கிறாய் என்றால் உதவு பார்ப்போம்' என அறியாத பரம்பொருளிடம் சவால் விட்டேன்.

ஒரு நிமிடம் உறைந்து விட்டேன். என்ன திருவிளையாடல் இது. இப்படி கூடவா ஒருத்தருக்கு உதவி கிடைக்கும். நாக்கு தளுதளுத்தது. மேற்படி பேச முடியாமல் திருச்சிக்கு டிக்கெட் எடுத்தோம்.

உடனடியாக அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் இருவருடன் நானும் சென்று சற்று நேரம் ரயிலில் உட்கார்த்து பேசினேன். ரயில் கிளம்ப போகும் நேரம் எதோச்சையாய் ஞாபகம் வந்து 'சாப்பிட்டியப்பா' என சரவணனை கேட்டேன். 'இல்லை அண்ணா' என சன்னமான குரலில் சொன்னான். கையில் இருந்த பத்து ரூபாயை அவனிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து விடை பெற்றேன்.

எக்மோரில் இருந்து வீட்டுக்கு செல்ல வேண்டுமே. பாக்கெட்டில் துழாவி பார்த்ததில் வீடு போய் சேர்வதற்க்கான காசு தேறாது என்று தோன்றியது. சரி பரவாயில்லை,கடவுள் விட்ட வழி.. காசு இருக்கிற தூரம் வரைக்கும் டிக்கெட் எடுத்து விட்டு பின் நடத்து போய் விடலாம் என கணக்கிட்டு பட்டினப்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறினேன். இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது..

பள்ளி நண்பன் ஒருவன் பேருந்தில் டிக்கெட் கேட்டு நின்றுக்கொண்டு இருந்தான். என்னை பார்த்ததும் 'உனக்கு எங்க போகணும்' என கேட்டு எனக்கான பயணச்சீட்டையும் அவனே எடுத்துக்கொண்டான். அவனது முகத்தை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி பார்த்தேன். மேகத்தினூடே கடவுள் சிரிப்பது போல் இருந்தது.

-

பண்புடன் சித்திரைத் திருநாள் சிறப்பு போட்டியில் பரிசு பெற்ற கதை

Tuesday, May 31, 2011

எதை நோக்கி தென் திருவாங்கூர் கிறிஸ்தவம் ?

Buzz-ல் பகிர்ந்து கொண்டதை இங்கே தொகுத்து தந்திருக்கிறேன்


தமிழ் சாதிகளை சத்ரியர்கள் ஆக்கி, அம்மனை அம்பாள் ஆக்கி, நாட்டார் தெய்வங்கள் அருள் பாலித்த இடங்களை வைதீக தெய்வங்கள் கொண்டு நிரப்பி......இன்னும் என்னென்னவோ செய்த தீவிர ஹிந்துத்வாக்களுக்கு சற்றும் குறைவானதல்ல...

மரபு வழி தமிழ் கிறிஸ்தவர்களின் சடங்குகளை தகர்த்து\விமர்சித்து பெந்தேகோஸ்த்தே கிறிஸ்தவர்கள் செய்யும் சாகசம்...

****************************************

ஆதிமனிதனின் கூட்டு வேட்டையை இன்றும் கடைபிடிப்பவர்கள் மீனவ சமுதாய மக்கள். அவர்கள் செய்யும் மீன் பிடி தொழிலாலையே இன்றும் குழு மனப்பான்மை அவர்களிடம் வேரூன்றி இருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்தமாக மதம் மாறியதில் இருந்து, இன்றும் ஏதேனும் போராட்டம் என்றால் அனைவரும் தம் தொழிலை விட்டு ஒன்று கூடுவது வரை அது தொடர்கிறது.......










கல்வி கற்ற பிள்ளைகள் கடல்புறத்தில் இருந்து விலகி நகர்புறத்தை நோக்கி நகர்வதும், அரசியல் சார்பில்லாத தலைவன் ஒருவன் உருவாகாமல் போனதும் மற்ற கிறிஸ்த்தவ சமூகங்களை ஒப்பிடும் போது மிகப்பெரிய பின்னடைவை அவர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

சிறு மத மோதலாக துவங்கிய மண்டைக்காடு கலவரம் பின் ஜாதிய வடிவெடுத்ததும் அடித்து கொண்டு செத்தது கிறிஸ்த்தவ மீனவனும், ஹிந்து நாடாருமே. கடலோரமும் அதனை ஒட்டிய ஹிந்து நாடார் கிராமங்களும் எரிந்து கொண்டிருந்த போது நாகர்கோயிலின் மத்திய பகுதியில் இருந்து வெகுவாக குளிர்காய்ந்து கொண்டிருந்தன சில ஹிந்துத்வா சக்திகள்......

காக்கி உடைகள் அணிந்து இவர்கள் துவங்கி வைத்த "ஜெய் காளி" கோஷம் தமிழ் சாதிகளை துண்டாட வழி செய்தது. அறுவடையின் பலனும் அவர்களுக்கே கிடைத்தது பின் வந்த தேர்தல்களின் வழியாக....

கலவரம் நடந்து ஏறக்குறைய மூன்று தசாப்தங்களை கடந்து விட்டாலும் இன்றும் அதன் வலிகளும், கசப்புகளும் இரு சமுதாய மக்களிடையே எச்சமாய் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

பி.ஜே.பி வேட்பாளருக்கு எதிராக ஒரு (ரோமன் கத்தோலிக்க) கழுதையை நிப்பாட்டினால் கூட அதற்க்கு விழும் ஓட்டுகளின் மர்மம் இது தான்.

*****************************************





ஒரு இனத்தின் பண்பாட்டை உள்வாங்காமல் எந்த ஒரு மதத்தையும் திணிக்க முடியாது.....
பண்பாட்டை சரிவர உள்வாங்காமல் உதிர்ந்து போனவை சமணமும், பவுத்தமும்......
உள்வாங்கி, அடர்த்தியான அஸ்திவாரத்தை போட்டு உட்கார்ந்து கொண்டது ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம்.

சூழ்ச்சி என்ற வெற்று சொல்லாடலை விட அதிபுத்திசாலித்தனம் என்ற சொல்லாடலே இதற்கு பொருந்தும், ஏனென்றால் சூழ்ச்சி என்பது காலத்தின் தொடர்ச்சியில் அழிந்து போக கூடியது.

தமிழர் மரபு வழிபாடுகள் அழிக்கப்படாமல் இருந்த காரணத்திற்காகவே பல நேரம் ரோ. க. கி - வத்தை சிலர் சிலாகிப்பது உண்டு.

உதாரணத்திற்கு :

பூசை - பூசை(மாஸ்)
கோவில் - கோவில் (சர்ச்)
வேதம் - வேதாகமம்(பைபிள்)
சாமியார் - சாமியார் (பாதிரியார்)
மந்திரம் - மந்திரம் (பிரேயர்)
படைத்தல் - அசனம் கொடுத்தல்
மொட்டையடித்தல் - மொட்டையடித்தல்
பஜனை - பஜனை
சாமி சிலை - சொரூபம்
வேண்டுதல் - வேண்டுதல்
நேர்ச்சை - நேர்ச்சை
குலசாமி - பாதுகாவலர்
தேர் இழுத்தல் - தேர் இழுத்தல்
...................
ஆய்வு நோக்கில் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் சென்று இப்பண்பாட்டு மதமாற்றத்தின் அடிவேரை நோக்கினால் சாதீய அடக்குமுறையின் கோரம் வெளிவருகிறது...
என்ன செய்ய??
நான்கு நூற்றாண்டுகளுக்கு பின் ஆதிக்கசக்திகள் விழித்து கொண்ட போது, மந்தைகள் அதன் கிடையை விட்டு எப்போதோ விலகி சென்று விட்டிருந்தன இன்னொரு மேய்ப்பனை தேடி..........

**************************************











தேர்தல் நேரங்களில் குமரி மாவட்ட பிஷப்புகளுக்கு கிடைக்கும் மரியாதை கோயிலுக்குள் இருக்கும் கடவுளுக்குக் கூட கிடைக்காது. பாராளுமன்ற தேர்தல் ஆகட்டும், சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் சாதி, சமய வேறுபாடு இன்றி பிஷப்புகளை சந்தித்து, கும்பிட்டு, புகைப்படங்களும் எடுத்துக்கொள்வார்கள். மறுநாள் நாகர்கோவிலின் முக்கியமான தினசரிகளில் இந்த புகைப்படங்கள் வலம் வரும்.

சந்தேகமே இல்லாமல் இதன் தாக்கம் அந்த தேர்தலிலும் எதிரொலிக்கும். பொதுவாக ஆர்.சி, சி.எஸ்.ஐ, எல்.எம்.எஸ் போன்ற சில முக்கியமான கிறித்தவ பிரிவு பிஷப்புகளுக்கே இந்த மரியாதை.

பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ பிரிவினர் சிதறி ஐந்து பேர் சேர்ந்தால் ஒரு கூடாரத்தை அமைத்து கோயில் கட்ட துவங்கிய பின் பிஷப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. கொடுமை என்னவென்றால், யாரும் அவர்களிடம் ஆதரவு கோராமலே தன்னிச்சையாக இந்தகட்சிக்கு நாங்கள் ஆதரவு என அறிவிக்கும் கூத்துக்களும் சில நேரம் நடக்கும்.

***********************

- தொடரும்

Monday, March 28, 2011

நினைவுகள் தொடர்கதை.......... கிரிக்கெட்




உலகக் கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா கோப்பையை வெல்லுமா?, வெல்லாதா? என ஊர் நண்பர்களிடையே காரசாரமாக பேசிக்கொண்டாலும், எங்களுடைய பால்யகாலத்து கிரிக்கெட் விளையாட்டை அசை போடாமல் நகர்ந்து விடவே முடியாது.

கபடி, கச்சி(கோலி), செவன்டீஸ், கிளியான் தட்டு, கண்டு விளையாட்டு, கைபந்து( ஓ பந்து), தள்ளும் பில்லும் என விளையாடிக்கொண்டிருந்த எம் கிராமத்து வாண்டுகளை கிரிகெட் நோக்கி நகர்த்திய (துரதிஷ்டமான) பெருமை எனக்கும் உண்டு. இன்றோ... இதை பற்றி உள்ளூர நிறைய வருத்தங்களும் உண்டு.

வருடம் சரிவர ஞாபகம் இல்லை. ஆனால், எண்பதுகளின் பிற்பாதியில் ஜெயக்குமார் அண்ணன் வீட்டு தொலைகாட்சி வழியாக கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கு அறிமுகமானது கிரிக்கெட். அதிகாரபூர்வமான கேப்டனாக இல்லாவிட்டாலும் கிரிக்கெட்டின் சில சட்டதிட்டங்கள் தெரிந்ததாலும், எங்களை விட நன்றாக விளையாடுவதாலும் அணித்தலைவராக சுனில் அண்ணன் செயல்பட்டான்.


எங்களுக்கு கிரிக்கெட் குறித்து ஏதேனும் சந்தேகம் வந்தால் அதை நிவர்த்தி செய்வதும் சுனிலண்ணன் தான். பவுலிங் போடும் போது வெஸ்ட் இண்டீஸ் அணியினர் எதற்காக தங்கள் பேண்டில் ஒரு வெள்ளை துணியை சொருகி வைத்திருக்கிறார்கள் என்ற எங்கள் கேள்விக்கு அவன் சொல்லும் பதில் A+ ரகம்.

தொண்ணூறுகளின் இடையில் தான் ReeBok, MRF, BDM போன்ற நிறுவனங்களின் பேட்டுகள் எங்கள் ஊரை வந்தடைந்தன. அதற்கு முன்பாக நல்ல முற்றின பச்சை தென்னை மட்டையையும், பிலா மரத்தில் செதுக்கிய பலகையும் வைத்தே நெடுநாள் விளையாடினோம். பேட்டின் கைப்பிடியை அழகுபடுத்துவதற்க்காக வில்லஸ் அண்ணனின் சைக்கிள் கடையிலிருந்து சல்லீசான சைக்கிள் டியூபுகளை வெட்டி வாங்கி கைப்பிடியில் இட்டுக் கொள்வதும் உண்டு.

சிங் அண்ணனிடம் ஈட்டி மரப்பலகையில் செதுக்கிய பேட் ஓன்று இருந்தது. அந்த பேட்டில் பட்டாலே பந்து பறக்கும். அதை யாரும் திருடிவிடாமலிருக்க 'பேட்டை கோவிலில் மந்திரிச்சு வச்சிருக்கேன்' என பயம் காட்டி வைத்திருந்தான். படிக்காமல் எப்போதும் விளையாடி கொண்டிருக்கிறான் என பின்னொரு நாளில் புளியமுத்து அவிக்கும் போது விறகாக பயன்படுத்திக் கொண்டார் அவனுடைய அப்பா.



பெரும்பாலும் கடைகளிலிருந்து பந்து வாங்குவதே இல்லை. பொருளாதாரம் ஒரு காரணம் என்றாலும் ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என பங்கிட்டு வாங்கப்படும் பந்துகள் வெகு சீக்கிரம் உடைந்து போய் விடும். இன்னொன்று தென்னைமரம், புளியமரம், பிறுத்தி(அன்னாசி) செடிகளுக்கு நடுவே நாங்கள் விளையாடுவதால் வெகுசீக்கிரம் தொலைந்தும் போய் விடும்.

நாங்கள் உபயோகிக்கும் பந்துகளுக்கு ஒரு வித்தியாசமான வடிவமே இருந்தது. பால் வெட்டப்பட்ட ரப்பர் மரத்தின் வெட்டு ஓரமாக ரப்பர்பால் உறைந்து இருக்கும். அதை 'ஒட்டு கறை' என்போம். சுமார் பத்து, பதினைந்து மரங்களின் ஒட்டு கறையை எடுத்து உருண்டை வடிவில் சுற்றிக்கொள்வோம். ஏறக்குறைய உள்ளங்கையடக்கமான ஒரு அளவு வந்தவுடன் ரப்பர் பாலில் தோய்த்து, அதை இரண்டு நாட்கள் காய வைத்து எடுப்போம். பின் வீட்டில் நொய்ந்து போய் கிடக்கும் பழைய வேட்டிகளை கிழித்து இறுக்கமாக சுற்றி, நெசவு நூலில் பந்தை சாக்கூசி வைத்து தைத்து விடுவோம்.

இப்போது பந்து இறுக்கமான உருண்டை வடிவத்துக்கு வந்து விடும். அதன் நூல் ஓரமாக லேசாக ரப்பர் பாலை ஊற்றி, மிதமான வெயிலில் காய வைத்து எடுத்தால் பந்து ரெடி. சரியாக சுற்றப்படும் இது போன்ற ரப்பர் துணி பந்துகள் சுமாராக மூன்று முதல் நான்கு மாதம் வரை ஓடும்.

மரங்கள் நெருக்கி சேர்த்த கிராமமாக இருந்ததால் எப்போதும் ஸ்டம்புகளுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. என்ன !!!.... ரப்பர் பந்தை விட துணிபந்து சற்றே கனமாக இருப்பதால் பல நேரம் ஸ்டாம்புகளை மாற்ற வேண்டியதாயிற்று. சில நேரம் பேட்டுகளையும்.....

கிரிக்கெட்டின் பெரும்பாலான விதிமுறைகள் எங்களுக்கு பரிச்சையமே கிடையாது. எங்களுக்குகென சில 'சிறப்பு விதிகளை' உருவக்கிகொண்டோம். எங்கள் ஊரிலேயே நாங்கள் விளையாடிக்கொண்டிருந்ததால் அச்சிறப்பு விதிகள் எங்களுக்கு பெரும் பாதிப்புகள் எதையும் தரவில்லை. இன்றும் அபத்தமான அவ்விதிகள் சிரிபூட்டுபவை.

ஒருநாள் விளையாடி கொண்டிருக்கிறோம். வெற்றிபெற எங்களில் ஓரணிக்கு 12 ரன் தேவை. ஜோஸ் அண்ணன் அடித்து விட்ட பந்து நல்லாம்பி பெரியப்பாவின் மாட்டு தொழுவம் அருகே இருந்த சாணம் குண்டில் விழ பந்தை எடுக்கும் முன் 12 ரன்களையும் ஓடியே எடுத்து விட்டார்கள்.

இன்னொருநாள்.....
கடைசி விக்கெட் வெற்றிபெற 20 ரன் எடுக்க வேண்டும். ஜாண் அண்ணன் அடித்த பந்து பக்கத்தில் இருந்த குட்டி தென்னை மரத்தின் மட்டையில் சிக்கிகொண்டது. ஜோன்ஸ் உடனடியாக மரத்திலேறி பந்தை தட்டி விட்டு கீழே நின்றிருந்த லாரன்சை கேட்ச் பிடிக்க செய்தான். துரதிஸ்டவசமாக ஜாண் அண்ணன் & கோ - வால் 15 ரன்னே எடுக்க முடிந்தது. இது கேட்ச் கிடையாது என ஒரு சாரார் வாதிட, கேட்ச் என மற்றொரு சாரார் மல்லுகட்ட தகராறு முற்றி அடுத்த ஆட்டத்திலிருந்து அந்த சிறப்பு விதிமுறை மாற்றப்பட்டது.

வாரநாட்களை காட்டிலும் வார விடுமுறை நாட்களே நாங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. வாரவிடுமுறைகளில் பெரும்பாலான வாண்டுகள் தங்கள் தகப்பனார்களின் விளைகளில்(தோப்பு) ஏதாவது ஒரு வேலையை செய்ய நிர்பந்திக்கப்பட்டு இருந்தனர். அவ்வாறு, விளைக்கு போகும் நேரத்தில் டிமிக்கி கொடுத்துவிட்டு விளையாட வந்துவிடுபவர்கள் உண்டு. இதனாலையே, எங்கள் ஊர் பெரிசுகளுக்கு ஆரம்பகாலத்தில் கிரிக்கெட் என்றாலே வேப்பங்காயாக இருந்தது.

ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். ஒரு அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி பெற 32ரன் தேவை. மூன்றாம் பந்தை வீசிகொண்டிருந்த ராஜா, ஆவேசமாக கையில் கம்புடன்(குச்சி) ஓடி வந்த அவன் தகப்பனாரை கண்டதும் பந்தை போட்டுவிட்டு ஓடியே போய் விட்டான். எங்களூர் சிறப்பு விதிமுறையின்படி வேறு யாரும் மிச்சம் பந்துகளை வீச கூடாது. ரன் எடுக்க வேண்டிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- நினைவுகள் தொடரும்...........