Saturday, July 11, 2015

பாபநாசம், திரிஷ்யம் மற்றும் இன்னும் பிறவும்..

தமிழக-கேரள எல்லையோர மாவட்டக்காரன் என்பதால், எண்பதுகளின் பிற்பாதியில் துவங்கி  இரண்டாயிரத்தி ஐந்து வரை வந்த பெருவாரியான மலையாள சினிமாக்களை தொலைகாட்சி மற்றும் திரையரங்குகள் வழியாக காணும் வாய்ப்பை பெற்றவன் நான். இன்றளவும் ஒரு மலையாள சினிமாவை தமிழில் 'ரீமேக்' செய்கிறார்கள் என்றாலே லேசான பதட்டத்தோடு தான் பார்க்க வேண்டி இருக்கிறது; நம்முடைய ரீமேக் படங்களின் வரலாறு அப்பிடி..

80'களில் துவங்கி இன்றளவும் மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களில் எனக்கு பிடித்தமானவை என்று பட்டியலிட்டால், 'பூவே பூச்சூடவா,வருஷம் 16, என் பொம்மு குட்டி அம்மாவுக்கு' போன்ற ஒரு சில படங்களே நினைவில் நிற்கின்றது. 'பிரண்ட்ஸ்' ஐ வடிவேலின் உடல் மொழிக்காக பிடிக்கும். 'காதலுக்கு மரியாதை' யை ஊரே கொண்டாடிய போதும், பாசில் விஜய் ரசிகர்களுக்காக செய்துக்கொண்ட சில சமரசத்தால் என்னால் முழு ஈடுபாட்டோடு படத்தை பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மூலப்படத்தின் ஆன்மாவை ஒட்டுமொத்தமாக சிதைத்த படங்கள் எனப் பார்த்தால் குசேலன், திண்டுக்கல் சாரதி, கிரீடம், பிரியாத வரம் வேண்டும் என ஒரு பெரும் பட்டியலே போடலாம், அதும் 'குசேலன்' படத்தில் கிராமப்பின்னணியில் டால்பினை துள்ள விட்ட சவுந்தரியாவையும், வாசுவையும் மன்னிக்கவே முடியாது. ;-) 

சரி, பாபநாசம்-திரிஷ்யத்துக்கு வருவோம்.திரிஷ்யத்தை மூன்று முறை பார்த்தும் கொஞ்சமும் சலிக்கவே இல்லை. கேரளாவின் எதோ ஒரு மூலையில் வசிக்கும் மலையாளியின் வீட்டிலும் இதுபோன்ற ஒரு எளிய குடும்பம் இருக்கும், இதுபோன்ற ஒரு சம்பவங்கள் நடக்கலாம் என்ற எதார்த்த உலகை அவர்களருகில் திரிஷ்யம் கொண்டுவந்ததாலோ என்னவோ ஒட்டுமொத்த கேரளாவுமே படத்தை கொண்டாடி தள்ளி விட்டது. இன்னொன்று கடைசி நிமிடம் வரை என்ன நடக்கும் என்று திகைப்போடு காத்திருக்க வைத்த திரைக்கதை.  திரிஷ்யம் தமிழில் வரப் போகிறது, 'உலக நாயகன்' நடிக்கப்போகிறார் என்ற செய்தி வெளியானதுமே அந்த ஆரம்பகால பதட்டங்கள் எனக்குள்ளும் இருந்தது. ஜெயமோகனும்-சுகாவும் இருப்பதால் டிங்கரின் பார்த்து ஓரளவுக்கு தமிழுக்கானதை போல இழுத்துக் கொண்டு வருவார்கள் என்று நம்பினேன். ஜெ-சுகா-ஜீ ஜோசப்-கமல் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது என்று தான் சொல்வேன். ஆச்சரியமாக, எனக்கும் 'பாபநாசம்' பிடித்திருந்தது.

பாபநாசத்தில் முற்றிலும் எரிச்சலை தந்த ஒரு விஷயம் ஆஷா சரத்தின் குரல். திரிஷ்யத்தை போலவே பாபநாசத்திலும் நடிப்பில் அசத்தில் இருந்தாலும், தமிழில் அவரது சொந்தகுரல் ஒருவிதத்தில் சவ்வு போல இழுக்கிறது. காணாமல் போன மகனை நினைத்து பரிதவித்து தனது கணவனிடம் அவர் புலம்பும் காட்சியை தமிழிலும் மலையாளத்திலும் ஒப்பிட்டு பாருங்கள், மலையாளத்தில் ஒரு 'நடிப்பு ராட்சஷியாய்' தெரியும் அவர்,  ஒரு சாதாரண மேடை நாடக நட்சத்திரத்தின் அனுபவத்தையே பாபநாசத்தில் நமக்கு தருகிறார்.

த்ரிஷ்யத்தில் கிடைக்காது பாபநாசத்தில் கிடைத்த ஒரு நல்ல அனுபவம் என்று பார்த்தால் சுலைமான் பாய் -யாக வரும் M.S.பாஸ்கரின் கதாப்பாத்திரம். தினமும் தொழும் இஸ்லாமியர்களின் தலை நெற்றியில் கோடு விழும் என்ற அளவில் நுணுக்கமாக அணுகி இருக்கும் திரைகுழுவினருக்கு பாராட்டுக்கள்..

சுறா, புறா, இறா என வெளியிட்டு தமிழ் சினிமா இரசிகர்களை வதைக்கும் படங்களுக்கிடையில் பாபநாசம் ஒரு நல்ல விஷுவல் ட்ரீட். மூலப் படத்தின் ஆன்மாவை சிதைக்காமல் தமிழில் கொண்டு வந்ததிற்காக திரைகுழுவினருக்கு எமது அன்பும், வாழ்த்தும்.

டிஸ்கி: 'அஞ்சான் ஆகஸ்ட் 15 தான் வெளியானது, ஆனால் ஆகஸ்ட் 2 அன்று தென்காசி செல்வதாக சுயம்புலிங்கத்தின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர், இதை வைத்து அவர்களை கைது செய்யலாம்' என ஒரு 'சினிமா ஆர்வலர்' முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார். உண்மையில் It's a good catch, unfortunately it was a no ball. 'பாபநாசத்தை' சினிமாவாக புறத்தில் இருந்தது பார்க்கும் போது இது முற்றிலும் சரியே, அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் சொதப்பின இடம் அது. ஆனால், சினிமாவுக்கு உள்ளிருந்து பார்க்கும் போது, திரைஅரங்கின் உள்ளிலும் அஞ்சான் திரைப்படத்தின் காட்சியே காட்டப்படுகிறது. Good luck next time. ;-)


புகைப்படங்கள் நன்றி : கூகுள்